பெரெய்லி: உத்தரப் பிரதேசத்தில் கோசாலையில் கொடுக்கப்பட்ட கம்பு தழைகளில் நைட்ரேட் அளவு அதிகமாக இருந்ததால், அதனை உட்கொண்ட பசுக்கள் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் பகுதியில் கோசாலை இயங்கி வருகிறது. இதில் தீவனம் உட்கொண்ட 61 பசுக்கள், கடந்த வியாழன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக, கோசாலையின் பொறுப்பாளரான கிராம மேம்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தீவனங்களை விநியோகித்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி கால்நடை ஆராய்ச்சி மைய இயக்குனர் திரிவேணி சிங் கூறுகையில், ‘பசுக்கள் உட்கொண்ட கம்பு தழைகளில் அதிகளவு நைட்ரேட் உள்ளது. இதனால் ஏற்பட்ட அதிகளவு ரத்த கசிவால் பசுக்கள் உயிரிழந்து உள்ளன. மற்ற பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இது உறுதியாக தெரியும்,’ என தெரிவித்தார்.