அண்ணாநகர்: அமைந்தகரையில் ரூ.1.70 லட்சம் சொத்து வரி செலுத்தாத 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாயாக உள்ளது. ஆனால், பலர் ஆண்டுக்கணக்கில் முறையாக சொத்து வரி செலுத்தாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், மக்களுக்கான திட்ட பணிகளை் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, சமீப காலமாக அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. மேலும், ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்து, நீண்ட நாட்களாக வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடிடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைந்தகரை பகுதியில் சொத்து வரி செலுத்தாத 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அமைந்தகரை அய்யாவு தெருவில் செல்போன் ரீசார்ஜ் கடை மற்றும் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜமன்னார், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் ரூ.1.70 லட்சம் மாநகராட்சிக்கு பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு பலமுறை வருவாய்த் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும், வரி பாக்கியை செலுத்தவில்லை.
எனவே, அண்ணாநகர் 8வது மண்டல உதவி வருவாய்த்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.