இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சபரி(33). தனியார் மில் ஊழியர். இவரது மனைவி சரளா (28). 7 வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளான். மீண்டும் கர்ப்பமடைந்த சரளா, பிரசவத்திற்காக தாய் வீடான பாலாப்பட்டிக்கு சென்றிருந்தார். அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குறை பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
மகன் சர்வேஷ் தந்தை சபரியுடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறான். நேற்று முன்தினம் இரவு பாலாப்பட்டிக்கு வந்த கணவரிடம் இரட்டை பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து விட்டதே எனக்கூறி சரளா அழுதுள்ளார். நேற்று அதிகாலை தந்தை நல்லமுத்து எழுந்து பார்த்தபோது, 2 குழந்தைகளுடன் சரளாவை காணாமல் திடுக்கிட்டார். அப்பகுதியில் தேடியபோது, அங்குள்ள கிணற்றில் சரளாவின் சடலம் மிதந்தது.
இது குறித்து விசாரித்த கொங்கணாபுரம் போலீசார், இரட்டை பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த சரளா, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள், மீனவர்கள் வந்து 2 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர்.