×

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழாவில் தேர் பவனி-திரளானோர் பங்கேற்பு

ராதாபுரம் : பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழாவையொட்டி அன்னையின் தேர் பவனி நடந்தது. இதில், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்களில் ஒன்றான தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழா கடந்த 27ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 2ம் திருநாளன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆயர் ரெத்தினசாமி தலைமையில் ஆரோக்கியமாதா கெபி திறப்பு விழா நடந்தது. இதை தொடர்ந்து மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான 8ம் திருவிழாவில் மாலை ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை சிற்றாலயம் திறப்பு விழாவும், நற்கருணைப்பவனியும் நடைபெற்றது. தொடர்ந்து, 9ம் திருவிழாவையொட்டி காலை ஆயர் தலைமையில் உறுதிப்பூசுதல் வழிபாடு நடைபெற்றது. மாலை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் இரக்கத்தின் ஆண்டவர் கெபி திறப்பு விழாவும், நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது.

இரவு 10 மணிக்கு மலையாளத்திருப்பலியும், இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றது. இப்பவனியில் திரளான பக்தர்கள் உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். திருவிழாவையொட்டி மாதா காட்சி கொடுத்த மலையடிவாரத்திலும், இரக்கத்தின் ஆண்டவர் கெபியிலும் அசன விருந்து நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குதந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குதந்தை சிபுஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.

அதிசய பனிமாதா ஆலயத்திருவிழாவுக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆலயத்திற்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டார். அவரை பங்கு தந்தை ஜெரால்டு ரவி, தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் ஊர்மக்கள் வரவேற்றனர். பின்னர் பங்கு தந்தை ஜெபம் செய்து பேரவைத்தலைவருக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

Tags : Chariot Bhavani-Thirlanor ,Panimatha temple festival ,Southykallikulam , Radhapuram: Mother's Chariot Bhavani was held on the occasion of the Holy Miraculous Panimatha Temple Festival. A large number of people participated in this.
× RELATED தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி...