×

போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று முதற்கண் கேட்டுக் கொள்கிறேன். போதைப் பொருட்கள் சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது.

எதிர்காலத்தைப் பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமூகத்தின்-நாட்டின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கின்றது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது.  அதேநேரத்தில், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அரசின் மிக முக்கியக் கடமையாக நினைக்கிறேன். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இதன் ஒருபகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்துள்ளோம். அன்றைய நாள், பள்ளி - கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும்.

அன்றைய நாள், தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்க வேண்டும். இது அரசியல் பிரச்னை அல்ல; நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்னை. எனவே, நீங்கள் இதில் உங்கள் பங்களிப்பினை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலமாகத்தான் போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். போதைப் பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம். அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

*10ம் தேதி கலெக்டர், எஸ்பிக்கள் கூட்டம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘விளையும் பயிர்களை நாசம் செய்யும் களையாகச் சமூகத்தில் முளைத்துவிட்ட  போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடும்-வேரடி மண்ணோடும் களையெடுக்க தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட  ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்குபெறும் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் 10ம் நாளன்று, சென்னையில்  உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,CM. K. Stalin , Tamil Nadu govt should cooperate in eradicating drug use, CM M.K.Stal's letter to all MLAs
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...