ஆவடி: ஆவடியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்து இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரியை ஏற்று முதன்முறையாக ஆவடி முதல் தூத்துக்குடி 170ஏ ஆவடி முதல் திருநெல்வேலி 180ஏ என்ற புதிய வழித்தட எண் பேருந்து இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு இரண்டு வழித்தட எண் பேருந்துகளை பொதுமக்கள் பயன்ப்பாட்டிற்கென கொடியசைத்து துவக்கி வைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சரியான நேரத்தில் பேருந்தை இயக்க கைக்கடிகாரம் வழங்கியதுடன் பேருந்தில் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை அமைச்சர் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் கூறியது:
பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால் குடிக்கும் பூனை என அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் நாசர், பால் குடித்து, குடித்து பழக்கியவர் பால் நினைப்பாகவே இருப்பவர் அவர், அப்படி தான் மற்றவர்களையும் நினைத்துக்கொள்வார். தொடர்ந்து பேசிய அவர், தன்னை முன்நிலைப்படுத்திக்கொள்ள அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் இதுபோன்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆவினில் சத்து மாவு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற நிலை உண்மை. ஆனால் அதை வெளியில் வாங்கி விற்பனை செய்வதாக பொய் புகாரை கூறும் அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதுறு மேனியுமாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளார்.
விரைவில் ஆவடியிலிருந்து திருப்பதிக்கு நேரடியாக பேருந்து வசதி கூடிய சீக்கிரத்தில் துவங்க படும் என கூறிய அவர், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் ஆவடியில் விரைவு பேருந்து சேவை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆவின் குடிநீர் அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் மையம் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறினார். மேலும் இந் நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் வி.சிங்காரம், மாநகர திமுக செயலாளர் பேபி சேகர் மண்டல குழு உறுப்பினர்கள் ஜி.நாராயண பிரசாத், பேபி சேகர், ராஜேந்திரன், விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.