×

சிறுமியின் கருமுட்டை எடுத்த விவகாரம்; ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சீல்வைத்த அரசின் உத்தரவு சரிதான் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்  கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்தும் அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து  மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதாக திருப்தி அடைந்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும்.  பதிவை சஸ்பெண்ட் செய்ததற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு   மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி,  பொது நலன் கருதி விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையை சீல் வைக்க சட்டத்தில் இடமுள்ளது. முன்கூட்டி நோட்டீஸ் அனுப்ப அவசியமில்லை. சிறுமியிடம் ஒன்பது முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார். மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 35 ஆண்டுகளாக எந்த புகாருக்கும் இடமில்லாத வகையில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, நடவடிக்கைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூற முடியாது. கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது. எனவே, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Erode , The girl's egg retrieval issue; The High Court's order was correct in the government's order sealing Erode's private hospital
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...