×

நெய்வேலி அனல் மின் நிலைய பணியில் தமிழர்கள் புறக்கணிப்பா? திமுக கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். நெய்வேலி அனல் மின்நிலைய பணி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: இளநிலை பொறியாளர்கள், தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறை இளநிலை பொறியாளர்  தேர்வுக்கு 5.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 30,816 பேர்.  இதில் 1.12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் தமிழகத்தை பொறுத்தவரை 3,830 பேர் தேர்ச்சி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அகில இந்திய அளவில் தேர்வு வைக்கப்பட்டு எடுக்கப்படும் பணியில் தமிழகம் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஓரிரு நாளில் தொழிற்சங்க நிர்வாகிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து நெய்வேலி அனல் மின் நிலைய வேலை வாய்ப்புகளில் 90% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக  இருப்பதாக ஒன்றிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* பழங்குடியினர் நிதி எவ்வளவு
பழங்குடியினர் விவகாரத்தில் தமிழகத்தில் ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலை மாவட்ட வாரியாக தெரிவிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் வருட வாரியாக ஒதுக்கி வழங்கப்பட்ட நிதியின் அளவு எவ்வளவு? என்று மாநிலங்களவை திமுக எம்பி கிரிராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சர் ரேணுகா சிங் சருத்தா, ‘ஒன்றிய அரசு பழங்குடி வகுப்பினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் பழங்குடியினருக்கான 2021-22ம் ஆண்டுக்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

* கிராமப்புற வளர்ச்சியில் சரிவா?
கடந்த  5 ஆண்டுகளில் கிராமப்புற ஊதிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சரிவை ஒன்றிய அரசு சந்தித்துள்ளதா?. அப்படியென்றால் கிராமப்புற ஊதிய வளர்ச்சியை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மாநிலங்களைவையில் திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்ரீ ராகேஸ்வர் டெலி,  ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2017-2021 வரையிலான  கிராமப்புற ஊதியங்கள் சாதகமான வளர்ச்சியை கண்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதி சட்டம் 2005 பிரிவு 6ன் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. திறமையற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நிதி ஆண்டும் தேவையான நிதியை ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவிக்கிறது’ என தெரிவித்தார்.

* சேலத்தில் விமான சேவை எப்போது?
சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை எப்போது தொடங்கும்? என ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என மக்களவை திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய எம். சிந்தியா, ‘சேலம் விமான நிலைய சேவை ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விமான சேவை ஆரம்பிப்பது விரைவில் உறுதிசெய்யப்படும்’ என தெரிவித்தார்.

Tags : Tamils ,Neyveli ,Union ,Minister ,DMK , Will Tamils boycott Neyveli thermal power plant work? Union Minister's answer to DMK question
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!