சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வானவர்களுக்கு வருகிற 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலை பணிக்கான செயல் அலுவலர் (கிரேடு 1) பதவியில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 23, 24ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடந்தது.
இத்தேர்வில் 989 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 50 பேர் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு வருகிற 18ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.