திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் அருகே மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது வேடர் புளியங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வி.பி. சிந்தன் நகர் பாலசுப்பிரமணியன் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.22.50 லட்சம் செலவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து புதிதாக போடப்பட்ட மெட்டல் சாலை மழையால் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் மழை காலங்களில் அதிக தண்ணீர் வருவதால் சாலைகள் அடிக்கடி சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே இப்பகுதி சாலையி தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்’ என்றனர்.