நெல்லை: நெல்லையில் தனியார் ஹோட்டலில் கிரில் சிக்கனுக்கு மட்டுமே மயோனைஸ் தரமுடியும் என அசைவ உணவகத்தில் எழுதி போட்டிருந்த நிலையில் 1/4 சிக்கனுக்கு மயோனைஸ் கேட்டு தகராறில் ஈடுபட்டு கடையை சூறையாடியதாக பாஜக பிரமுகரை கடை ஊழியர்கள் சரமாரியாக தக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுப்பட்ட 8 உணவக ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தெற்கு புறவழிச்சாலையில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எதிரே அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நெல்லை சந்திப்பு உருடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாஜக எஸ்.சி. எஸ்.டி பிரிவின் தச்சநல்லூர் பகுதி செயலாளர் சிவன்பெருமாள் மற்றும் அவரது நண்பர்களான கரையிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட மூவர் நேற்று இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் பரோட்டா மற்றும் 1/4 கிரில் சிக்கன் வாங்கியிருக்கின்றனர். 1/4 கிரில் சிக்கனுக்கு மயோனைஸ் தரும்படி கேட்டுருக்கின்றனர். கடையில் இருந்த ஊழியர்கள் 1/4 கிரில் சிக்கனுக்கு மயோனைஸ் தரமுடியாது என்றும் 1/2 கிரில் சிக்கன் வாங்கினால் தான் மயோனைஸ் தரமுடியும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த பாஜக பிரமுகர் உள்ளிட்ட மூவரும் 1/4 கிரில் சிக்கனுக்கு மயோனைஸ் கேட்டு அடம்பிடித்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. கடையில் கூட்டம் உள்ள நேரத்தில் தகராறில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி கடை ஊழியர்கள் அவர்களை அனுப்பி வைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது.அப்போது கடையில் இருந்த பொருள்களை பாஜக பிரமுகர் உள்ளிட்ட மூவர் சூறையாடியுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இரு தரப்புக்கும் இடையேயான தகராறால் ஹோட்டல் இருந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலில் பாஜக பிரமுகர் சிவன்பெருமாள் மற்றும் மணிகண்டன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலப்பாளையம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் ஊழியர் 8 பேரை கைது செய்தனர்.