பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே நேற்று பட்டப்பகலில் பூட்டியிருந்த தனியார் நிறுவன ஊழியரின் வீட்டை உடைத்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகை, அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த சேட்டு (43). இவர், கும்மிடிப்பூண்டியில் ஒரு தனியார் நிறுவன தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கூலிவேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சேட்டுவும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு கிளம்பி சென்றனர். பின்னர் நேற்றிரவு இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், அவர்களின் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து சேட்டு அதிர்ச்சியானார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் வெளியே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம், அரை கிலோ வெள்ளி பொருட்களை பட்டப் பகலில் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆரணி போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சேட்டுவின் வீட்டில் மர்ம நபர்களின் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.