ஒசூர்: ஒசூர் அடுத்து கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கர்நாடகாவில் இருந்து வெளியேறக்கூடிய மழை நீரானது கெலவரப்பள்ளி ஆற்றின் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போது அணையின் நிலவரமானது 1370 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 1308 கன அடியானது வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த் துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக சின்னகொல்லு ,பெந்த கொல்லு ,பெர்டிகான பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருவாய்த் துறை சார்பில் ஒசூர் வட்டாட்சியர் கவாஸ்கர் உத்தரவின் பேரில் ஒலிப்பெருக்கியின் மூலமாக கிராம மக்கள் அனைவரும் விழிப்புணர்வாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆற்றங்கரையோரத்தில் மாடுகளை கழுவுவதற்கோ அல்லது ஆற்றங்கரையில் இறங்கவோ மற்றும் துணி துவைக்க கூடாது என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.