அலகாபாத் : பத்திரிகையாளர் சித்திக் கப்பான் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியது.
அப்போது உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்தினரைக் கேரளாவைச் சேர்ந்த சில பத்திரிக்கையாளர்கள் சந்திக்கச் சென்றனர். அப்போது வழியிலேயே சித்திக் கப்பன் உள்ளிட்ட சில பத்திரிக்கையாளர்களை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மீது உபா சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி பல முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், பத்திரிகையாளர் சித்திக் கப்பான் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.