×

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செய்தித்துறை அமைந்துள்ளது: சென்னை, திருச்சி மண்டல இணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு..!!

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தலைமையில் நேற்று மாநில செய்தி நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சென்னை, திருச்சிராப்பள்ளி மண்டல  இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின்  பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  செய்தித்துறை அமைச்சர்சாமிநாதன்  தனது உரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னை, திருச்சிராப்பள்ளி ஆகிய இரண்டு மண்டலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் அன்று நடைபெறுகிறது.  

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செய்தித் துறை அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு  இந்த  அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நல்ல  பல திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் திறம்பட செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை எளிதில் மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை இத்துறை சிறப்பாகச் செய்து வருகிறது. மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தற்போது இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள சமூக ஊடகங்களில் செய்திகள் இடம் பெற ஆவண செய்ய வேண்டும்.  

மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன்  அறிந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அலுவலர்களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில், பொதுமக்களுக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் பணிகளை முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.  

மேலும், 75வது சுதந்திர தின விழாவினை சிறப்பாக நாம் கொண்டாடி வருகிறோம். இது தொடர்பாக, தொடர்ந்து தலைமையிடத்திலிருந்து வரப்பெறும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுத்த வேண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்டங்களில் தியாகிகளின் படங்கள் விடுபட்டிருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்தாலோசித்து உடனடியாக அவை இடம்பெற நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள  நினைவகங்கள், மணிமண்டபங்கள் மற்றும் அரங்கங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மாலை 7.00 மணி வரை பார்வையாளர் நேரத்தை நீட்டிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, இதனை இணை இயக்குநர்கள் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் நினைவகங்களுக்கான வழிகாட்டிப் பலகைகள் அமைக்க வேண்டும். சுதந்திர தின விழாவை முன்னிட்ட மாவட்டங்களில் உள்ள நினைவகங்களை சுத்தம் செய்து, புதுப்பொலிவுடன் பராமரிக்கவும், தியாகிகளின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து, மின் விளக்குகளுடன் பிரகாசமாக ஒளிரும் வகையில் அமைக்கும்போது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே  தியாகிகள் குறித்த விழிப்புணர்வு கூடுதலாக ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் விளம்பரப் பணிகள் மேற்கொண்டது குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது செய்தித்துறையினைப் பாராட்டினார் என்று குறிப்பிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலை உரையாற்றினார். முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில், கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு. சிவ.சு.சரவணன், கூடுதல் இயக்குநர் (மக்கள்தொடர்பு) மு.பா. அன்புச்சோழன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Minister ,Saminathan ,Chennai ,Trichy Zone , Government, people, bridge, media, minister Saminathan
× RELATED மாநகராட்சி எல்லைகள்...