லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ரேணுகா குமார், ஜூதிகா பதன்கார் மற்றும் விகாஸ் கோதல்வால் ஆகியோர் விருப்ப ஓய்வு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜூதிகா பதன்கார் சொந்த காரணத்துக்காக பணி ஓய்வு பெற விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், கல்வி விடுமுறையில் இங்கிலாந்தில் இருக்கும் விகாஸ் உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வை தெரிவித்துள்ளார். எனினும் உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை கூறவில்லை. ரேணுகா குமார் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகின்றார். ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான பிரசாரத்தின் மூலம் அறியப்பட்ட இவர், ஒன்றிய அரசு பணியில் இருந்து கடந்த மாதம் உத்தரப் பிரதேசம் அனுப்பப்பட்டார். சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் தங்களது கடிதத்தை தலைமை செயலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.