சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப அண்ணாமலை என்ன உள்துறை அமைச்சரா? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 9ம்தேதியிலிருந்து 15ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கி.மீ., நடை பயணம் செய்வதாக முடிவு செய்துள்ளோம்.பாஜ சுதந்திர தினம் கொண்டாடுவதற்கும் நாங்கள் கொண்டாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். அவர்கள் முதன் முறையாக இந்த ஆண்டு தான் கொண்டாடுகிறார்கள். அதனால் தான் கொடியெல்லாம் தருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு அமலாக்கத்துறையை அனுப்ப போவதாக அண்ணாமலை கூறுகிறார். அவர் என்ன உள்துறை அமைச்சரா. ஒரு அமைச்சர் இல்லத்திற்கு அண்ணாமலை அமலாக்கத் துறையினரை அனுப்புவார் என்றால் இவரிடம் அமலாக்கத் துறை உள்ளதா அல்லது இந்திய அரசாங்கத்திடம் அமலாக்கத்துறை உள்ளதா. திமுகவிற்கு நாங்கள் இருக்கிறோம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட பொதுவுடமை கட்சிகள் என அனைவரும் அருகில் இருக்கிறோம்.