ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்ததையடுத்து, 7 மதகுகள் வழியாக உபரிநீர் முழுமையாக நேற்று திறக்கப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணையில், தொடர் மழை காரணமாக கடந்த 2ம் தேதி 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று காலை 9.20 மணிக்கு நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து முதல் கட்டமாக 1,190 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. மாலையில் அணைக்கு வரும் 2,656 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. திறப்பிற்கு முன் 3 முறை அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. அணையின் பெரிய மதகுகளில் 7 மதகுகளின் வழியாக தண்ணீர் சீறி பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது. கரையோரத்தில் வசிக்கும் 5 மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்னர்.