தண்டையார்பேட்டை: மேற்குவங்கம் மதன்பூரை சேர்ந்தவர் சுர்பதி சர்தார் (17), இவர் கட்டிட வேலை செய்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து தண்டையார்பேட்டை புது வைத்தியநாதன் தெருவில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கொடூரமான நிலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவருடன் தங்கி இருந்தவர்கள் யாரும் இல்லாததால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஆதார் கார்டு மட்டும் கிடந்தது. அவரது பர்ஸ், செல்போன் போன்றவை மாயமாகி இருந்தது.