சென்னை: குடும்ப பிரச்னை தொடர்பாக அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரையே கைது செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு அளித்த புகாரில், குடும்ப பிரச்னையில் தனது மகனை அவரது மாமனார், மைத்துனர் ஆகியோர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் குறித்து விசாரணை எதுவும் நடத்தாமல் எதிர்தரப்பினர் அளித்த பொய் புகாரில் மகனை தீவிரவாதியைப் போல கைது செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அவர் அளித்த புகார் மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த விவகாரத்தில் அண்ணாநகர் சரக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் குணசேகரன் மற்றும் அரும்பாக்கம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ஜகதீசன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இதற்கான இழப்பீடாக புகார்தாரருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையைக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமே வசூலிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரும்பாக்கம் அப்போதைய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு உள்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்து செய்துள்ளது.