புதுடெல்லி: மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கட்கரி பதிலளிக்கையில், ‘‘சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண 2 திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒன்று செயற்கைகோள் அடிப்படையிலானது. இதில், காரில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் வாகனத்துக்கான சுங்க கட்டணம் கார் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும். இன்னொன்று, பதிவு எண் பலகை தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். பதிவு எண் பலகை தொழில்நுட்பம் தான் சிறந்தது என்பது என்னுடைய கருத்தாகும்.
இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. ஆனால் 6 மாதங்களுக்குள் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு பதிலளித்த கட்கரி, ‘‘அதிர்ஷ்டவசமாகவும், துரதிர்ஷ்டவசமாகவும் இந்தியாவின் சுங்க சாவடியின் தந்தையாக நான் கருதப்படுகிறேன். கடந்த 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் திட்டத்தின்கீழ் இந்தியாவில் முதல்முறையாக தானேவில் சுங்க சாவடி அமைக்கப்பட்டது,’’ என்றார்.