பெங்களூரு: ‘ஒன்றிய பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கையால், பண நடமாட்டமே இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்,’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் 75வது பவளவிழா பிறந்த நாள் தாவனகெரே மாநகரில் பிரமாண்ட மாநாடு போல் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் தற்போது ஆளும் பாஜ அரசு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிடையாது. ஜனநாயகத்தை படுகொலை செய்து குறுக்கு வழியில் அமைந்துள்ள ஆட்சியாகும். நாடு தற்போது நெருக்கடியான சூழலில் சிக்கி தவிக்கிறது. ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கை நாட்டை நிதி நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.
இதிலிருந்து தப்பிக்க பணமதிப்பிழப்பு சட்டம், ஜிஎஸ்டி சட்டம் போன்ற திட்டங்கள் கொண்டு வந்து மக்களின் தலைமையில் நிதி சுமையை ஏற்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் தவறான திட்டங்களால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கி தொழிலாளர் வர்க்கத்தை வஞ்சித்து வருகிறது. இதனால், தொழிலாளர்கள், விவசாயிகள், அமைப்புசாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோர் நாசமாகி வருகிறார்கள். நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் நெருக்கடியில் உள்ளது. மக்களிடம் பண நடமாட்டம் இல்லாமல் தவிக்கின்றனர். அவசரத்திற்கு கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.