சின்னாளபட்டி: பெருமாள்கோவில்பட்டி எம்எஸ் நகரில் சாலை வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் எம்.எஸ்.நகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த வருடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 15ம் நிதிக்குழு மானிய நிதியில் ரூ.3லட்சத்து 5ஆயிரத்து 428 மதிப்பில் பேவர்பிளாக் கற்கள் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்படவில்லை. இதனால் உரிய சாலை வசதியின்றி இப்பகுதிமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழைநீரை வெளியேற்ற உரிய கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலையில் சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, இப்பகுதி முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு குழாயை சுற்றிலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழை நீருடன் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.