பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே தச்சம்பாறையை சேர்ந்தவர் ஹம்சா மகன் ஷானவாஸ் (40). இவர் மன்னார்க்காடு, தச்சம்பாறை, காரக்குறிச்சி ஆகிய இடங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கேரிபேக்கில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, இவரை அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், இவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து, கேரளாவில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஷானவாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.