சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்துக்கு உட்பட்ட கரைமேடு ஊராட்சியில் தரமின்றி சாலை அமைத்ததால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாய் உள்ளதால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கரைமேடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அரசினர் நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கி தெருக்களின் சாலைகளில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. அப்போதே சாலை, தரமின்றி அமைப்பதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் சாலையை தரமின்றி அமைத்து பணிகளை முடித்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சாலையில் குடியிருப்புகளுக்கு முன்பு மழைநீர் சேறும் சகதியுமாய் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை ஆய்வு செய்து தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாலையின் உயரத்தை உயர்த்தி வடிகால் வசதியையும் ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.