×

செஞ்சி, சீர்காழியில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ரூ.1.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ரூ.3.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்துத்) துறை சார்பில் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 3 கோடியே 72 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகன தணிக்கை போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளை பெறவும், புதிய பகுதி அலுவலகங்களை தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்,  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 3 கோடியே 72 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகங்கள், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., போக்குவரத்து ஆணையர் திரு.இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Senchi ,Sirkazhi , Senchi, Sirkazhi, Motor Vehicle Inspector Office, Chief Minister M.K.Stalin
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து