×

தொடர் மழையால் தோப்பூர் நெல் சேமிப்பு கிடங்கில் 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதம்: மழையால் நனைந்து முளைவிடத் தொடங்கிய நெல் மணிகள்..!!

மதுரை: மதுரை தோப்பூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கில் தொடர் மழையால் 1000 டன் அளவிற்கு நெல் மூட்டைகள் சேதமடைந்திருக்கின்றன. மதுரை அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இந்த சேமிப்பு நிலையங்களில் இருந்து தான் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் அனுப்பி வைக்கப்படும். அந்த அளவுக்கு மிகப்பெரிய சேமிப்பு கிடங்காக இந்த நுகர்பொருள் வாணிப  சேமிப்பு கிடங்கு இருக்கிறது.

இதில் பகுதியளவு நெல் மூட்டைகள் அறைகளிலும், மீதம் உள்ளவை திறந்தவெளி மைதானத்திலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது ஒருவாரமாக பெய்யும் கனமழையின் காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. தார்பாய் கொண்டு நெல் மூட்டைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் அதி கனமழையால் சுமார் 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து, மழையால் நனைந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான விவசாயிகள், நெல் மூட்டைகளை அறைகள் அமைத்து பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thoppur ,Paddy Storage Warehouse , Rain, Dhoppur Paddy Storage, Paddy Bags
× RELATED மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை...