தர்மபுரி: தர்மபுரி ஆவின் நகர் பகுதியை சேர்ந்தவர் மேகராஜ், பாலக்கோடு பகுதியில் டூவீலர் ஷோரூம் வைத்துள்ளார். இவரது மகன் சச்சின் (16), தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமை, உறவினரான பாலாஜி வீட்டுக்கு சச்சின் வந்துள்ளான். பின்னர் பாலாஜியுடன் சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது ஒரு கும்பல் இருவரையும் கடத்தியது. சச்சின் தந்தை மேகராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் ரூ.1 கோடி கேட்டுள்ளனர்.
புகாரின்படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கவே அந்த கும்பல், ஓசூர் சிப்காட் அருகே சச்சினை மட்டும் இறக்கி விட்டனர். பின்னர் பாலாஜியை ஓசூர் அருகே இறக்கி விட்டு சென்றதாக பாலாஜி தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார், துருவி துருவி விசாரித்தனர். இதில் அவர் பணத்துக்காக உறவினர் மகனை கடத்தியதும், சந்தேகம் வராமல் இருக்க தன்னையும் மர்ம நபர்கள் கடத்தியது போல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.