சிங்கப்பூர்: கோத்தபயவுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததால், நாட்டை விட்டு ஓடிய கோத்தபய சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். முதலில் சிங்கப்பூரில் 15 நாட்கள் தங்கவே அனுமதி வழங்கிய சீன அரசு, தற்போது மேலும் 15 நாட்கள் தங்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால், வரும் 11ம் தேதி வரை சிங்கப்பூரில் கோத்தபய தங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று பல்வேறு நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் சிங்கப்பூர் அரசிடம் மனு அளித்துள்ளன. இந்நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அளித்த பதிலில், ‘பொதுவாக, வெளிநாட்டு முன்னாள் தலைவர்களுக்கு சலுகைகள், விலக்கு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை சிங்கப்பூர் அரசு வழங்குவதில்லை. அதன்படி, கோத்தபயவுக்கும் எந்தவித சலுகைகயோ, விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை,’ என்று தெரிவித்துள்ளார்.