×

வால்பாறையில் தொடர் மழை: நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. வால்பாறையில் கடந்த 2 மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. தொடரும் மழையால், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. ஆறுகளில் நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. இப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் நடுமலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

பசுமையான தோட்டங்கள் பின்னணியில் வளைந்து நெளியும் மலைச்சரிவில் மழைவெள்ளம் ஓடும் அழகிய காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மேலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக சின்னக்கல்லார், பெரியகல்லார், சிங்கோனா, குரங்குமுடி, ஷேக்கல்முடி, கவர்கல், ஆனைமுடி, அக்காமலை எஸ்டேட் உள்ளிட்ட வனப்பகுதிகளை ஓட்டிய எஸ்டேட்களில் குளிர் அதிகளவில் உள்ளது. மேலும், தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட்களில் குளிர் காரணமாக விடுப்பு எடுத்து வருகின்றனர். தொடர் குளிரால் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தொடர் குளிர் வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்கையை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
வால்பாறை பகுதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று (செவ்வாய்) ஒருநாள் மட்டும் வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Tags : Valparai, torrential rains, flooding in Nadumalai river
× RELATED யானை தாக்கி விவசாயி பலி