×

குற்ற பின்னணி நபர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!

சென்னை: குற்ற பின்னணி நபர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள் மீதான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், நேற்று (01.08.2022) கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். இந்த சிறப்பு தணிக்கையில் சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 692 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு, 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 108 குற்றவாளிகள் தற்போது சிறையில் இருப்பது தெரியவந்தது. சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட  59 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்காக செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 159 குற்றவாளிகளிடம்  இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும், காவல் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள் என்றும் அறிவுரை கூறி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக, காவல் ஆணையாளர் அவர்கள் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், குற்ற பின்னணி நபர்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப  அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Chennai ,Police Commissioner ,Shankar Jiwal , Strict action against persons with criminal background who engage in criminal activities again: Chennai Police Commissioner Shankar Jiwal warns..!
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...