சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் தேதியில், ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்ந்ததை தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்த 27, 28-ம் தேதிகளில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.256, ரூ. 304 என உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,800-க்கு அதிகமாகவும், ஒரு கிராம் ரூ.4,800-க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்கவே அச்சப்படும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் சென்றனர். அதன் பின் சற்றும் குறைவை காணாத தங்க விலையானது நாளுக்குநாள் உயர்வை மட்டும் சந்தித்து வரும் நிலையில், இன்றும் சற்று உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.38,560--க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து, ரூ.63.60-க்கும், ஒரு கிலோ 63,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சிறிது அதிகரித்து இருப்பது, மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.