புதுடெல்லி: சமூக வலைதள கணக்கில் தனது புரொஃபைல் பிக்சரில் இந்திய தேசியக் கொடியின் படத்தை பிரதமர் மோடி வைத்துள்ளார்.நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.அதன்படி, 91-வது ‘மனதின்குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. இதில் பேசிய பிரதமர் மோடி,ஆகஸ்ட் 2ம் தேதி தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மூவர்ணக்கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளில் வைக்கப்படும் சுயவிவரப் படமாக (டிபி) வைக்க வேண்டும்,என்றார்.
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், பிரதமர் மோடி சமூக வலைதள கணக்கில் தனது புரொஃபைல் பிக்சரில் இந்திய தேசியக் கொடியின் படத்தை வைத்துள்ளார்.ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளில் தேசியக் கொடியை புரொஃபைல் பிக்சராக மாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றிய வெளியிட்ட பிரதமர் மோடி, எனது சமூக ஊடக பக்கங்களில் நான் டிபியை மாற்றியுள்ளேன், உங்கள் அனைவரையும் அவ்வாறே செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசியக்கொடியை வடிவமைத்து நமக்குக் கொடுத்த முயற்சிகளுக்காக நம் தேசம் எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கும்,என்றார்.