×

ஏசி வெடித்து தீப்பிடித்ததில் புது மாப்பிள்ளை கருகி சாவு

சென்னை:  சென்னை திரு.வி.க. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம் (28), ஆவின் விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், ஆடி மாதம் என்பதால் தனலட்சுமியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் ஏசியை போட்டுவிட்டு ஷியாம் தூங்கியுள்ளார். திடீரென பயங்கர சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி அறை முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. சத்தம் கேட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஷியாமின் தந்தை பிரபாகர், தம்பி ஆகியோர் கீழே வந்து பார்த்தபோது படுக்கை அறையில் இருந்து பயங்கரமாக தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.

இதனால் அவர்களால் அறைக்குள் செல்ல முடியவில்லை. உள்ளே தூங்கிய ஷியாமின் நிலைமை என்னவென்று தெரியாமல் தவித்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்பியம், மாதவரம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அறையில் ஏற்பட்ட தீயை அணைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு படுக்கையில் ஷியாம் உடல் கருகி இறந்துகிடந்தார்.  அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : New Groom , New groom burnt to death when AC exploded and caught fire
× RELATED சிறுமியை திருமணம் செய்த புது மாப்பிள்ளை கைது