பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் கூலி ஆட்கள்வைத்து மூட்டைகளில் மணல் கடத்தப்படுவதாக திருத்தணி புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன் தினம் இரவு பள்ளிப்பட்டு பஜார் வீதி அருகே கொசஸ்தலை ஆற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது ஆற்றில் மூட்டைகளில் மணல் நிரப்பிக் கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்தனர். அப் பகுதியில் பதுக்கிவைத்த 60 மூட்டைகள் மணல் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிப்பட்டில் வீடு கட்டி வரும் திமுக முக்கிய பிரமுகர் கூலி ஆட்கள் வைத்து ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் மணல் மூட்டைகளில் கடத்தி பயன்படுத்தப்படுவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மணல் கடத்தல் சம்பவங்கள் தடுக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருவதாக டி.எஸ்.பி விக்னேஷ் தெரிவித்தார்.