சென்னை: எந்த ஆதாரமும் இல்லாமல் பத்திரிகை செய்தியை வைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ₹10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீதிமன்ற வளாகம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பாலாஜி, செந்தில்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முழுமையாக ஆராய்ந்து ஆதாரங்களுடன் பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளிதழ் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, மனுதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.