×

காதல் மனைவி குத்திக்கொலை; கோனே அருவியில் உள்ள பாறையில் அழுகிய நிலையில் உடல் கிடைத்தது: கொடூர கணவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

புழல்: கோனே அருவியில் காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில்,  தற்போது அழுகிய நிலையில் பாறை நடுவே கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மதன் (19). இவர் ஆட்டோ டிரைவர். புழல் அடுத்த கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த மாணிக்கம் - பல்கிஸ் தம்பதியின் மகள் தமிழ்ச்செல்வி (19) என்பவரை மதன் காதலித்து வந்தார். இவர்கள் காதல் விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததும் திருமணம் செய்துவைத்து உள்ளனர். இதன்பிறகு தமிழ்ச்செல்வியுடன் அவரது தாய் அடிக்கடி செல்போனில் பேசி நலம் விசாரித்துவந்ததுடன் கணவர், குடும்பத்துடன் அன்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி தமிழ்ச்செல்வி, அனைவருடனும் அன்பாக பழகிவந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 25ம்தேதி தாய் பேசியபோது தமிழ்ச்செல்வியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை தொடர்புகொண்டபோது போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தமிழ்ச்செல்வியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். கணவர் வீடு, நண்பர்களிடம் கேட்டபோதும் தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மதனை பற்றி விசாரித்தபோதும் அவரை பற்றி தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 30ம் தேதி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தமிழ்ச்செல்வியும் மதனும் ஒன்றாக செல்வதும் பிறகு மதன் மட்டும் தனியாக வருவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து மதனை பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது கோனே அருவியில் குளித்தபோது இரண்டுபேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மதன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார் என்று தெரிந்தது. மதனிடம் செங்குன்றம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த போதும் தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காமல் மாற்றி, மாற்றி பேசியுள்ளார். இது போலீசாருக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திவந்தது.

இந்த நிலையில், கோனே அருவியில் மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், நாராயணவனம் பகுதியில் உள்ள பாறையில் ஒரு பெண்ணின் செருப்பு, சுடிதார் கிடப்பதாக தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில், ஆந்திர போலீசார் அங்கு சென்று தேடியபோது அங்குள்ள பாறை இடுக்கில் இளம்பெண் சடலம் கிடந்தது. ஆனால் அந்த சடலம் அழுகிய நிலையில் எலும்புகூடாக கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொல்லப்பட்டவர் தமிழ்ச்செல்வி என்பது தெரிந்தது. இதுசம்பந்தமாக மதனிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். தமிழ்ச்செல்வியின் சடலம் கிடைத்துள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags : Kone Falls , Love wife stabbed to death; Body found rotting on rock at Kone Falls: Cruel husband's gruesome inquest
× RELATED ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள...