சென்னை : கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளிலும் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக பள்ளிகல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் நலன் கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.கல்விக்கட்டணம் பெறுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். அனைத்து பள்ளிகளும் கருத்துருவை அனுப்பியதை உறுதிப்படுத்தவும் , அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது,என்றார்.