×

தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை: போலீசில் நண்பர் சரண்

பல்லாவரம்: தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளியை படுகொலை செய்த நண்பர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். பல்லாவரத்தை சேர்ந்தவர் சின்னதுரை (40), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் சாலையோர நடைபாதையில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு மதுரையை சேர்ந்த ராஜா (44) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்ததுடன், வேலை முடிந்ததும் ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பல்லாவரம், இந்திராகாந்தி சாலை அருகே இவர்கள் 2 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் ராஜாவின் தாயை பற்றி சின்னத்துரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதன்பிறகு அவர்கள் சமாதானமாகி அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால், கோபம் குறையாத ராஜா நள்ளிரவு எழுந்தபோது சின்னத்துரை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே ராஜா, அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து சின்னத்துரையின் தலையில் போட்டுள்ளார். இதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்த ராஜா, அதிகாலையில் பல்லாவரம் காவல் நிலையத்தில் சரணடைநதார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னத்துரையின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதன்பிறகு ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர். போதையால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை நண்பன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Laborer ,Saran , Murdered by a stone on the head, a laborer, a friend in the police
× RELATED தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி...