வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 6.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 20 நாள் வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களாக உப்பளங்கள் நிறைந்த கோடிக்காடு, அகஸ்தியன் பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் சற்று கூடுதலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் உப்பள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. உப்பளங்களில் மழை நீர் தேங்கி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து, தார்பாய்களை மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.