குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹில்குரோ அருகே ராட்சத பாறை ஒன்று விழுந்தது. இதனை, ரயில்வே ஊழியர்கள் ஆய்வுக்கு செல்லும்போது சரியான சமயத்தில் பார்த்தனர். இதையடுத்து காலை 7.10 மணிக்கு 170க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ராட்சத பாறையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், தண்டவாளத்திலிருந்து முழுமையாக அகற்றி சீர்படுத்தினர். பின்னர் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் 3 மணி நேரம் தாமதமாக குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் குடிநீர் மற்றும் உணவின்றி பெரும் அவதியடைந்தனர்.