×

மத்திய உளவுத்துறையிடம் சிக்கிய ஆம்பூர் மாணவனுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு: 8 பிரிவுகளின் கீழ் வழக்கு; சிறையில் அடைப்பு

வேலூர்: தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக மத்திய உளவுத்துறையிடம் சிக்கிய ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் மீர்அனாஸ்அலி(22). இவர் ஆற்காடு பகுதியில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இவரது வீட்டை மத்திய உளவுத்துறை மதுரை டிஎஸ்பி சந்திரசேகரன், வேலூர், திருச்சி, திருப்பத்தூர் நகரங்களை சேர்ந்த உளவுத்துறை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குழுவினர் சுற்றி வளைத்தனர்.

வீட்டில் தனது அறையில் அந்த இரவு நேரத்திலும் லேப்டாப்பில் இயங்கி கொண்டிருந்த மீர்அனாஸ்அலியை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்களும், சிம்கார்டுகளும், லேப்டாப்பும் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவரை அணைக்கட்டு காவல் நிலையம் அழைத்து வந்து அங்குள்ள தனியறையில் வைத்து விசாரணை நடத்தினர். காலையில் தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘மீர்அனாஸ்அலியின் செல்போன் உரையாடல்கள், சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் அனைத்தையும் டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் மீர்அனாஸ்அலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் செயல்படும் குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பதிவுகளை போட்டு வந்ததுடன், அத்துடன் தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வரும் மொராக்கோ, சிரியா என பல நாடுகளில் பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது’ என்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு தங்கள் விசாரணையை முடித்துக் கொண்ட உளவுத்துறை போலீசார், கைது செய்யப்பட்ட மீர்அனாஸ்அலியை ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்களில் செயல்பட்டது, தேச விரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது என குற்றவழக்கு எண் 193/2022, ஐபிசி 121, 122, 125 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் 1967, 18, 18ஏ, 20, 38, 39 ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீர்அனாஸ்அலி, இன்று அதிகாலை ஆம்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Ambur ,Central Intelligence Agency , Ambur student caught by Central Intelligence Agency for links with terrorist movements: Case under 8 sections; Imprisonment
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு