சென்னை: வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் வி.கமால் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வி.நைனார் முகம்மது வரவேற்றார். தீர்மானத்தை பொதுச்செயலாளர் கண்ணன் முன்மொழிந்தார். பொதுக்குழுவில் சங்க செயல்பாடுகளை தமிழகத்தில் கொண்டு செல்லும் வகையில் செயல் தலைவராக இ.உஸ்மான்கான் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டிட தேர்தல் ஆணையம் உரிய பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும். இதனை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தவேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு கேரளத்தை போன்று அடையாள அட்டையை வழங்கி அதன் மூலம் அரசின் காப்பீடு திட்டம் என பல்வேறு சலுகைகள் பெற்றிட தமிழக அரசு திட்டம் வகுக்கவேண்டும். வெளிநாடுகளில் பணிபுரிபவர் இறந்தால், ஒரு வாரத்திற்குள் அவரது உடலை தாயகம் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசு தூதரகம் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். போலி ஏஜெண்ட்களை தமிழக அரசு களையெடுத்திடவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.