ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிய நபர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கலவை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (64). இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வருகின்றார். கடந்த 25ம்தேதி சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் தனது மகளை பார்க்க சென்ற ராஜேஸ்வரி அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில், அவரது வீட்டில் வேலை செய்யும் நபர், ராஜேஸ்வரிக்கு போன் செய்து, ‘’உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக ராஜேஸ்வரி வந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 10 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைப்போனது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.ராஜேஸ்வரி கொடுத்துள்ள புகாரின்படி, பென்னலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிறப்பு எஸ்ஐ மாதவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
40 லட்சம் காப்பர் கொள்ளை: ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரியை அடுத்துள்ள குஞ்சலம் கிராமத்தில் மின்சார வாரியம் சார்பில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காப்பர் வயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்குள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுசம்பந்தமாக உதவிசெயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் கொடுத்துள்ள புகாரில், ‘’சுமார் 40 லட்சம் மதிப்பு கொண்ட காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.