சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 1வது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி, 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டு பழுதானது. இதன்காரணமாக, மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் மின் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.