சேலம்: பாகிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் போனில் பேசியது தொடர்பாக, சேலத்தை சேர்ந்த வாலிபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு திலக்நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன் தொடர்பில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் அலிம் முல்லா என்பவர் சேலத்தில் பதுங்கியிருந்தபோது கைதானார். அவருடன் தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சேலம் வந்தனர். அவர்கள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் போனில் பேசியதாக சேலம் கோட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரை கைது செய்தனர். பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், வெள்ளி தொழில் செய்து வருகிறார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* இன்ஜினியரிங் மாணவரிடம் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர்அனார்லி (22). இவர் ஆற்காடு பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டை போலீசார் சுற்றிவளைத்து அவரை பிடித்தனர். அவரை அணைக்கட்டு காவல் நிலையத்தின் மேல்மாடியில் உள்ள தனி அறையில் வைத்து, காலை முதல் இரவு வரை விசாரணையை தொடர்ந்தனர். இவர் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டதுடன், தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வரும் மொராக்கோ, சிரியா போன்ற நாடுகளில் பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.