மதுரை: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘தாமிரபரணி ஆற்றின் கிழக்குப்பகுதியில் கலியாவூர் ஊராட்சியில் அமைந்துள்ள உழக்குடியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல், பழங்கால நாணயங்கள், கல்வட்டங்கள், குவளைகள், இரும்பு உருளைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. எனவே, இங்கு அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் பிளீடர் சாதிக்ராஜா ஆஜராகி, ‘‘உழக்குடி பகுதி உள்ளிட்ட 230 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்வது பற்றி உரிய முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.