சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் வி.கமால் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வி.நைனார் முகமது வரவேற்றார். தீர்மானத்தை பொதுச்செயலாளர் கண்ணன் முன்மொழிந்தார். பொதுக்குழுவில் சங்க செயல்பாடுகளை தமிழகத்தில் கொண்டு செல்லும் வகையில் செயல் தலைவராக இ.உஸ்மான்கான் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டிட தேர்தல் ஆணையம் உரிய பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது, வெளிநாடுகளில் பணிபுரிபவர் இறந்தால், ஒரு வாரத்திற்குள் அவரது உடலை தாயகம் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசு தூதரகம் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், 5 ஆயிரம் முதல் சுமார் ரூ.30 ஆயிரம் வரை ஏஜென்ட்கள் கேட்கும் நிலையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும், போலி ஏஜென்ட்களை தமிழக அரசு களையெடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.