அம்பத்தூர்: வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ‘வீ ஷேப்’ மைதானத்தில் கஞ்சா விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ‘வீ ஷேப்’ மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த மைதானத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த 6 பேரை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, அவர்களிடம் 2 கிலோ கஞ்சா மற்றும் 4 கத்திகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் (23), கொரட்டூர் பகுதி சேர்ந்த சக்திவேல் (23), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (20), பாபு (23), பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (20), அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (21) என்பதும், இவர்கள் இந்த மைதானத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.