பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் சமூகவலைதளங்களில் ‘வெடிகுண்டு மாணவர்கள் குழு’ செயல்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு தயாரித்து பள்ளிகள் மீது வீசிய 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள சில பிரபல பள்ளியின் முன் சமீபத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது பற்றி நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இதில் மாணவர்கள் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இது பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இன்ஸ்டாகிராமில் குழுவாக செயல்படும் மாணவர்கள், தாங்களே வெடிகுண்டு தயாரித்து வீசியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, இந்த நகர பள்ளிகளை சேர்ந்த 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 10 - 12ம் வகுப்பு மாணவர்கள். இவர்களில் 8 பேர் மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும், கொலை முயற்சி சடத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மற்ற 27 மாணவர்கள் 17 வயதுக்கு குறைவான சிறுவர்கள். இவர்கள் சிறுவர் சீர்த்திருத்த விடுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிரயாக்ராஜ் மாவட்ட எஸ்பி கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சமூக வலைதளம் மூலமாக குழுவாக சேர்ந்த மாணவர்கள் இடையே வெடிகுண்டு வீசும் திறமை தொடர்பாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. 2 ஆண்டுக்கு முன் ஒரு மாணவர் பிரிவு, முதல் முறையாக நகரத்தின் பிரபல பள்ளி வாசலில் வெடிகுண்டு வீசியுள்ளது. இதற்கு போட்டியாக மற்றொரு மாணவர்கள் குழு, சமீபத்தில் வெடிகுண்டுகளை தயாரித்து பள்ளிகள், கடைகளின் மீது வீச திட்டமிட்டு செயல்பட்டுள்ளது,’ என்றார்.